பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ தான் இளம்பெண்ணாக இருந்தபோது தனது பாலியல் ஆசைகளை பூர்த்தி செய்ய தன்னைப் பயன்படுத்தியதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அமெரிக்காவில் பிறந்த வர்ஜீனியா கியூஃப்ரே என்ற பெண் ஆஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொண்டார்.

பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் III-யின் இளைய சகோதரரும் அரச குடும்பத்தில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத்-தின் இரண்டாவது மகனுமான ஆண்ட்ரூ, யார்க் டியூக் என்று அழைக்கப்படுகிறார்.
இளவரசர் ஆண்ட்ரூவும் வர்ஜீனியாவும் ஒன்றாக இருந்த புகைப்படம் ஒன்று கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வைரலானது.

இதுகுறித்து 2015 ஆம் ஆண்டு பிபிசிக்கு அளித்த பேட்டியில், ஆண்ட்ரூ தன்னை மூன்று முறை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக வர்ஜீனியா கூறினார்.
மேலும், 2000-02 காலப்பகுதியில், இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ நியூயார்க்கிலும் லண்டனிலும் தனது காமத்தைத் தீர்த்துக் கொள்ள என்னைப் பயன்படுத்தினார். அதற்காக, அவர்கள் அமெரிக்க குழந்தை கடத்தல்காரர் ஜெஃப்ரி எஃப்ஸ்டீனின் உதவியை நாடினர் என்று தெரிவித்திருந்தார்.
இந்த விஷயம் பின்னர் லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆண்ட்ரூ மற்றும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வர்ஜீனியா வழக்குத் தொடர்ந்தார்.
இளவரசர் ஆண்ட்ரூ எந்தத் தவறும் செய்யவில்லை என்று ஆண்ட்ரூவின் நண்பர்களும் பக்கிங்ஹாம் அரண்மனை செய்தித் தொடர்பாளர்களும் கூறிய நிலையில் வர்ஜீனியாவும் ஆண்ட்ரூவும் ஒன்றாக இருப்பதாக வெளியான புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து 2022 ஆம் ஆண்டில், வர்ஜீனியாவிற்கு வெளியிடப்படாத ஒரு பெரிய தொகையை செலுத்தி அமெரிக்க நீதிமன்றத்தில் ஆண்ட்ரூ வழக்கைத் தீர்த்துக் கொண்டார்.
இந்த நிலையில் மேற்கு ஆஸ்திரேலியாவின் நீர்காபி பகுதியில் உள்ள தனது வீட்டில் வர்ஜீனியா கியூஃப்ரே வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக வர்ஜீனியா-வின் தோழி ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

தற்போது வர்ஜீனியா கியூஃப்ரேவுக்கு 41 வயதாவதாகவும் அவர் கடந்த சில ஆண்டுகளாக துன்புறுத்தலுக்கு ஆளானதாக அவரது தோழி டினி வான் கூறியுள்ளார்.
கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நடந்த பேருந்து விபத்தில் வர்ஜீனியா காயமடைந்தார். இது ஒரு பேருந்து விபத்தா? கொலை முயற்சியா? என்று சந்தேகமாக இருப்பதாக வர்ஜீனியா தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு, அவர் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன், பல தீய சக்திகள் என்னை முடிவுக்குக் கொண்டுவரப் பார்க்கின்றன என்று அவர் X இல் பதிவிட்டுள்ளார்.
அதே நேரத்தில், ஆண்ட்ரூ வர்ஜீனியா வழக்கில் தொடர்புடைய அமெரிக்க குழந்தை கடத்தல்காரர் ஜெஃப்ரி எஃப்ஸ்டீனும் 2022 இல் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.