காலம் மாறிப்போச்சு : காதலன் மீது திராவகம் வீசிய இளம்பெண்..

காதலிக்க மறுத்த பெண்கள் மீது இளைஞர்கள் திராவகம் வீசி முகத்தைக் கோரமாக்கும் சம்பவத்தைக் கேள்விப் பட்டுள்ளோம்.

இதற்கு நேர் மாறாக, திரிபுரா மாநிலத்தில்  காதலித்து விட்டு, திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது இளம்பெண் ஒருவர் திராவகம் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள கோவாய் மாவட்டத்தைச் சேர்ந்த பினாதா சாந்தல் என்ற இளைஞரும், பிரியுதா என்ற  பெண்ணும், கடந்த எட்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.

பள்ளிப் பருவத்தில் ஆரம்பித்த இவர்கள் காதலில் இன்னொரு பெண் குறுக்கிட்டுள்ளார்.

பிரியுதாவை பிரிந்து வேறு பெண்ணுடன்  பினாதா அண்மைக்காலமாகச் சுற்றி திரிந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரியுதா, தன்னை கல்யாணம் செய்து கொள்ளுமாறு பினாதாவை வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

ஆனால் பிரியுதாவை திருமணம் செய்து கொள்ள பினாதா மறுத்து விட்டார்.

இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற பிரியுதா, காதலன் பினாதா மீது திராவகம் வீசியுள்ளார்.

படுகாயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போலீசார் பிரியுதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

அவரை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு விட்டதால், பிரியுதா ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

-பா.பாரதி.