சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் சி.ஐ.டி. நகரில் இருந்து 1.2 கிலோ மீட்டர் நீளத்திற்கு இரும்பு பாலம் அமைத்து தற்போதுள்ள பாலத்துடன் இணைப்பது குறித்து 2021-2022 சட்டசபை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து வடக்கு உஸ்மான் சாலையின் கோட்ஸ் சாலை சந்திப்பில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் வரை ஏற்கனவே உள்ள மேம்பாலத்தை தெற்கு உஸ்மான் சாலையில் சி.ஐ.டி. நகர் வரை நீட்டிக்கும் மேம்பால பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

2023ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த புதிய மேம்பாலம் கட்டும் பணி துவங்கிய நிலையில் தி.நகர் பேருந்து நிலைய சந்திப்பு முதல் ராமநாதன் தெரு அருகில் உள்ள ஜி.ஆர்.டி. நகைக்கடைக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த புதிய மற்றும் பழைய பாலங்கள் சந்திக்கும் இடத்தில் இரண்டுக்குமான உயரம் தொடர்பாக பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்தப் பணிகளை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆய்வு செய்த அமைச்சர் கே.என். நேரு 2024 டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மழை காரணமாக தாமதமாகும் பட்சத்தில் 2025 பிப்ரவரி மாதம் இதன் பணிகளை முடிக்கும் வகையில் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
அதோடு, இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் இதுகுறித்து பேசிய அமைச்சர் கே.என். நேரு, தி.நகர் மேம்பால பணிகள் முடியும் தருவாயில் உள்ளதை அடுத்து மே மாதம் இந்தப் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படும் என்று அறிவித்தார்.

இருந்தபோதும், 2023ம் ஆண்டு இருந்ததைப் போன்றே ரங்கநாதன் தெரு மற்றும் ராமநாதன் தெரு இடையே இன்றளவும் மேம்பாலம் அமைக்கப்படாமல் உள்ளது.
இந்த பாலம் அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதால் ஏற்பட்டுள்ள தாமதத்தை அடுத்து இந்தப் பாலம் 2026 தேர்தல் வரை திறக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், தி.நகர் வழியாக மற்ற பகுதிகளுக்கு செல்லும் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளதுடன் வரும் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களுக்கு தி.நகர் வரும் மக்களும் கவலையடைந்துள்ளனர்.
சென்னை தி.நகர் உஸ்மான் சாலை மேம்பாலம் மே மாதம் திறப்பு : சட்டசபையில் அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு