டில்லி:

காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் தேர்ந்தெடுக்கும் வகையில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம்  இன்று நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தில் கட்சித்தலைவர் தேர்ந்தெடுக்கப் படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து, காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்துவிட்ட நிலையில்,கடந்த சில மாதங்களாக தலைவர் இன்றி கட்சி தள்ளாடி வருகிறது.

இந்த நிலையில், நடப்பு ஆண்டு இறுதியில் மகாராஸ்டிரா, அரியானா, ஜார்கண்ட் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், கட்சிக்கு தலைவர் நியமிக்கப்பட வேண்டிய நெருக்கடியில் காங்கிரஸ் கட்சி உள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு ராகுலே தலைவராக நீடிக்க வேண்டும் என்று கட்சித்தொண்டர்கள் வலியுறுத்திய நிலையில், அதை ஏற்க ராகுல் மறுத்து விட்டார். அதையடுத்து, பிரியங்காவை தலைவராக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவரும் தலைவர் பதவி ஏற்க மறுத்துவிட்ட நிலையில், கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு ராகுலை போல இளந்தலைவர்கள் தேவை என ஒருதரப்பினர் கோரிக்கை வைக்கும் நிலையில், மூத்த உறுப்பினர்களே தலைவராக வேண்டும் என்று வெறொரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்

இந்த நிலையில், ராகுலின் தீவிர ஆதரவாளரான முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் தலைவராக தேர்ந்தடுக்கப்படலாம் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கிடையில் தலைவருக்கான போட்டியில்,  காங்கிரஸ் மூத்த தலைவர்களான கரண்சிங், அமரீந்தர் சிங் மற்றும் ஜனார்தன் திவேதி, கார்கே, ஷிண்டே, ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின் பைலட் போன்றவர்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமைகத்தில்  காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கூடுகிறது.

இன்றைய கூட்டத்தில்,   4 பேர் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளதாகவும், இதில் தலித் சமூகத்தை சேர்ந்த முகுல்வாஸ்னிக் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக வும் காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகுல் வாஸ்னிக் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.