கொரோனாவில் இருந்து கணவனைக்  காப்பாற்ற, உயிரை விட்ட மனைவி..

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கை சேர்ந்த பாசுதேவ் மாதோ என்பவர் மும்பையில் பஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
அங்கிருந்து , ஜார்கண்டை சேர்ந்த 30 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு, ஹசாரிபாக் வந்துள்ளார்.
அவர்களை சொந்த ஊரில் இறக்கி விட்டு,அருகே  உள்ள தனது ஊரான சருகுடர் சென்றுள்ளார்.அங்கு மனைவி குந்திதேவியை பார்த்துவிட்டு, அதே பஸ்சில் மும்பை புறப்பட்டார்.
ஆனால்,மனைவி குந்திதேவி,அவரை மும்பைக்கு அனுப்ப மறுத்து விட்டார்.
’’கொரோனாவால் மும்பையில் நிறையபேர் இறப்பதால் நீங்கள் மும்பை செல்ல வேண்டாம்’’ என்று வாக்குவாதம் செய்தவர், கணவனுடன் அந்த பஸ்ஸில் உட்கார்ந்து கொண்டார்.
‘’ நம்ம ஊர் ஆட்கள் பலர் மும்பையில் உள்ளனர். அவர்களையும்  ஏற்றிக்கொண்டு, மீண்டும் இங்கு வருகிறேன்’’ என்று சமாதானம் செய்து மனைவியை வீட்டுக்கு அனுப்பினார், மாதோ.
ஆனால் குந்தி தேவி, வீட்டுக்கு செல்லவில்லை.
பஸ்சின் ஓரமாக நின்று கொண்டிருந்தார்.
கணவன் மாதோ பஸ்சை ’ஸ்டார்ட்’ செய்து கிளப்பியபோது, பஸ்சின் முன் பக்கம் வந்துள்ளார்.
கணவன் இயக்கிய அதே பஸ்சின் சக்கரத்தில் சிக்கி, குந்தி தேவி உயிர் இழந்துள்ளார்.
இது தெரியாமல், மாதோ, மும்பைக்கு பஸ்சை ஓட்டி வந்து விட்டார்.
மும்பைக்கு வந்த பிறகே அவருக்கு மனைவி இறந்த செய்தி தெரிய வந்துள்ளது.
கொரோனாவில் இருந்து கணவனை பாதுகாக்கும் எண்ணத்தில் , மனைவி உயிர் இழந்த சம்பவம் , ஹசாரிபாக்கில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
– ஏழுமலை வெங்கடேசன்