வாஷிங்டன்: டிவிட்டர் பயன்பாடு தொடர்பான அமெரிக்க அதிபரின் மாற்று முயற்சிகளை முறியடிக்கும் அந்நிறுவனம், இந்தியாவில் பாரதீய ஜனதா தலைவர்கள் விஷயத்தில் மட்டும் எதற்காக நடவடிக்கை எடுக்கவில்லை? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வன்முறையைத் தூண்டும் வகையில் தொடர்ந்து பதிவிட்டு வந்த காரணத்தால், டிரம்ப்பின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. மேலும், மாற்று டிவிட்டர் கணக்குகளைப் பயன்படுத்த முனைந்த அமெரிக்க அதிபரின் முயற்சிகளையும் முறியடித்தது டிவிட்டர் நிறுவனம்.

ஆனால், டிரம்ப் விஷயத்தில் இவ்வளவு அதிரடியாக செயல்படும் அந்நிறுவனம், இந்தியாவில் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட, பாஜக ஆதரவு தலைவர்களின் விஷயத்தில் மட்டும் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

சம்பந்தப்பட்ட அந்த தலைவர்களின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்ட பிறகும், அவர்கள் புதிய கணக்குகளில் இயங்கி வருகிறார்கள். எனவே, இந்தப் புதிய கணக்குகள் தொடர்பாக என்ன நடவடிக்கை? என்று கேட்டு, டிவிட்டர் நிறுவனத்திற்கு எழுதப்பட்டும், அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கொரு நியாயம்… இங்கொரு நியாயம் டிவிட்டர் நிறுவனத்திற்கு..!