சென்னை: தமிழ்நாட்டிற்கு   தர வேண்டிய கல்வி நிதியை ஏன் ஒதுக்கவில்லை?” என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.


கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் ஏழை, மாணவர்களுக்கான 25% இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை. இதுதொடர்பாக    கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம்  சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த  மனுமீதான விசாரணை  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன்  அமர்வில் விசாரிக்கப்பட்டது.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கல்வி உரிமைச் சட்டத்தில் 25% இட ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தில் 60 % தொகையை மத்திய அரசு 40 சதவீதம் தொகையை மாநில அரசும் வழங்க வேண்டும். ஆனால்,   மத்திய அரசு, கடந்த 2021ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டுக்கு  எந்த கல்வி நிதியும் ஒதுக்கவில்லை என்று கூறியதுடன், இந்த திட்டத்தின்படி சேர்க்கப்படும் மாணவர்களுக்கு  100% தொகையை மாநில அரசு தான் வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.

மேலும்,   மாணவர்களின் கல்வி விஷயத்தில் அக்கறை கொண்டுள்ள மாநில அரசு, மத்திய அரசு நிதி ஒதுக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவெடுக்க மே 28ஆம் தேதி கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாகவும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும்  மத்தியஅரசு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய கல்வி நிதி   ஒதுக்காததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள்,   தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்காததால் பள்ளிகள்  மற்றும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறிய நீதிபதிகள்,  மத்தியஅரசு ஏன் நிதி ஒதுக்கவில்லை என  கேள்வி எழுப்பினர்.

இதற்குபதில் அளித்த மத்தியஅரசு தரப்பு வழக்கறிஞர், ”அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு வருவதாகவும் சில காரணங்களால் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கப்பட வில்லை” என தெரிவித்தார்.

உடனே நீதிபதிகள், என்ன காரணத்துக்காக நிதி ஒதுக்கப்படவில்லை என கேட்டபோது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், ”மத்தியில் ஆளும் கட்சிக்கு தமிழ்நாட்டில் ஒரு எம்பி கூட இல்லை என்பதால் ஒதுக்கவில்லை” என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25% இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை சமர்ப்பிக்கும் படி  மத்தியஅரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை  தள்ளி வைத்துள்ளனர்.