சென்னை: இரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கும் வகையிலான அன்புக் கரங்கள் திட்டம் இன்று தொடங்கி வைத்துள்ளார். அண்ணா பிறந்த நாளையொட்டி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி தொகையை வழங்கி இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அன்புக்கரங்கள் திட்டமானது, ஒரு புரட்சிகரமான திட்டமாக பார்க்கப்படுகிறது.

‘அன்புக்கரங்கள்’ திட்டம்
அன்புகரங்கள் திட்டமானது, மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில், தங்கள் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் குழந்தைகள் வளர்ந்து வருவதை அறிந்து, இக்குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், அவர்களது பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியைத் தொடர, 18 வயது வரை மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் இது.
அது மட்டுமல்லாமல், பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவித்துள்ளார்.
இந்த அறிவிப்பிற்கிணங்க, இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரையிலான மாதந்திர உதவித்தொகை “அன்பு கரங்கள்” நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் தமிழ் நாடு அரசால் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற யார் யார் விண்ணப்பிக்கலாம்:
1. ஆதரவற்ற குழந்தைகள்(பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்).
2. கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின்)
3. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள்( பெற்றோரில் ஒருவர் இறந்து, (Physically/mentally challenged) கொண்டவராக இருந்தால்)
4. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால்)
5. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்)
இவர்கள், மாவட்ட ஆட்சியர் – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பிக்கலாம். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களிலும் கூட இதற்காக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
கீழ்க்காணும் ஆவணங்களுடன், அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
1. குடும்ப அட்டையின் நகல்
2. குழந்தையின் ஆதார் அட்டையின் நகல்
3. குழந்தையின் வயது சான்று நகல் (பிறப்புச்சான்றிதழ்/ கல்வி மாற்றுச் சான்றிதழ்/ மதிப்பெண் சான்றிதழ்)
4. குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல்.
மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்த உதவித்திட்டத்தை பெற தகுதியானவர்கள் அதற்கு உரிய அதிகாரிகளை சந்தித்து பயன்பெறலாம்.