ஜெனிவா: ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.

உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியா உள்பட பல நாடுகள் தயாரித்துள்ள தடுப்பூ மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும் பல நிறுவனங்களின் தடுப்பூசிகள் சோதனையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனம் பல நிறுவனங்களில் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகிக்க அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, ஃபைசர் – பயோஎன்டெக், ஆக்ஸ்போர்டு – ஆஸ்ட்ராஜெனெகா (கோவிஷீல்டு) நிறுவன தயாரிப்புகளுக்கு  ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களாக பயனர்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தற்போது,  ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பு மருந்துக்கு  உலக சுகாதார நிறுவனம் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தடுப்பு மருந்தானது, ஒரே ஒரு டோஸ் போட்டால் போதுமானது என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பு மருந்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து, தற்போது உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.

முதல்கட்டமாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பு மருந்து 100 மில்லியன் டோஸ்அமெரிக்கா ஆர்டர் செய்துள்ளது. இதையடுத்து, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தடுப்பூசி உற்பத்தி பணியில் தீவிரம் காட்டி வருகிறது.