சென்னை: 1ம் வகுப்பு  முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தமிழ்நாடு முழுவதும் மூடப்பட்ட கல்வி நிலையங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளை கடந்தும், இன்னும் முழுமையாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. தொற்று பரவல் குறைந்துள்ளதால், உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து மற்ற வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பது குறித்து சுகதாரத்துறையினர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சர்கள்  பலக்கட்ட ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில், இன்று,  1-ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை  முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திபோது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கையை அமைச்சர் அன்பில் மகேஷ்  முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,  ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. பள்ளிகள் திறப்பு பற்றி தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பள்ளிகளை திறக்க அனுமதி கேட்டு வரும் நிலையில், பெற்றோர்கள் மத்தியில் தற்போது வரை கொரோனா அச்சம் இருப்பதால் பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.