டெல்லி: துபாயில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் விளையாடச் சென்ற  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா, திடீரென ஆட்டத்தில் இருந்து  விலகி, உடனடியாக தாயகம் திரும்பியது தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளன.

நடப்பாண்டு ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்துகொள்ள சிஎஸ்கே அணியினர் கடந்தவாரம் துபாய் சென்றிருந்தனர். இந்த நிலையில், சிஎஸ்கே வீரர் சின்னதல சுரேஷ் ரெய்னா, திடீரென போட்டியில் இருந்து விலகி, தாயகம் திரும்பினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சுரேஷ்ரெய்னா தாயகம் திருப்பியதற்கான காரணம் வெளியாகி உள்ளது. அவரு டைய உறவினர்கள் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

பஞ்சாப்  பதான்கோட் மாவட்டத்தில்  உள்ள தரியால் என்ற கிராமத்தில் கடந்த  19,  20ம் தேதிகளில்,   கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் சுரேஷ் ரெய்னாவின்   மாமா உயிரிழந்ததாகவும், நான்கு பேர் படுகாயமடைந்தாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த கொள்ளை சம்பவத்தில், அரசு ஒப்பந்ததாரக உள்ள, சுரேஷ் ரெயினாவின் மாமா  அசோக் குமார்  உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது.

மூன்று முதல் நான்கு பேர் கொண்ட  கொள்ளை கும்பல் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், சுரேஷ் ரெயினாவின் அத்தை மற்றும் குடும்பத்தினர் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த வேளையில், மர்ம ஆசாமிகள் பணம் கேட்டு மிரட்டியதாகவும், பின்பு ஆயுதங்கள் கொண்டு தாக்கியதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.

மறைந்த அசோக் குமாரின் தாயார் சத்யா தேவி, மனைவி ஆஷாதேவி (ரெயினா அத்தை), மகன்கள் அபின், குஷால் ஆகியயோர்  இந்த சம்பவத்தில் படுகாயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆஷா தேவி தர்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ் ரெய்னா உடனே, ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி தாயகம் திரும்பியதாக கூறப்படுகிறது.