2021-ம் ஆண்டே ! வருக !! வருக !!

கவிதை

பா. தேவிமயில் குமார்

 

அதோ பாருங்கள் !

அழைக்கிறது புதிய ஆண்டு !

 

கடந்ததெல்லாம் (2020)

கடந்ததே !

காலம் இனி

உங்களுக்காக நானிருக்கிறேன் என

ஒளி வீசி நிற்கிறது !

வலிமையான ஆண்டு !

வாருங்கள்…..

வரவேற்போம் !

நல்ல எண்ணங்கள்

நாளும், நாளும் சுரக்கட்டும் !

 

விடியும் பொழுதெல்லாம்

விழாக் கோலமாகட்டும் !

 

அன்பும், ஆரோக்கியமும்

ஆனந்தக் கூத்தாடட்டும் !

 

ஆசைகளும், அவசியங்களும்

அளவில்லாமல் நிறைவேறட்டும் !

 

வளமும் வசந்தமும்

வாசலில் காத்திருக்கட்டும் !

 

இன்முகமும், இனிய வாழ்வும்

இரண்டறக் கலக்கட்டும் !

 

மனிதத்தன்மை, மனங்களில்

மணக்கட்டும் !

 

எல்லோருக்கும், விரும்பியது

எப்போதும் கிடைத்திடட்டும் !

உறவுகளையும்,

உற்ற நண்பர்களையும்,

உலகத்தையும்

இந்த ஆண்டு தன்

இனிய நடையில்

ஒளி வீசச் செய்யட்டும் !

 

அடுத்த ஆண்டு (2022)

ஆரம்பிக்கும் போது……

இதுவல்லவோ ஆண்டு

இனிமையான ஆண்டு !

 

என

வாழ்த்திச் சொல்ல

வாய்ப்பு கொடு ஆண்டே !

 

புத்தாண்டே வருக !

புதுப்பொலிவைத் தருக !