சேலம்: சேலம் ஆத்தூர் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய தவெகவினர், கடையை மூடா விட்டால், ‘குடும்பத்துடன் குடிக்கும்’ போராட்டம் நடத்துவோம் என கூறினார். இது பேசும்பொருளாக மாறி உள்ளது.
ஆத்தூரில் அரசு டாஸ்மாக் கடையை அகற்றவில்லையொன்றால் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் குடும்பத்துடன் குடிக்கும் போராட்டம் என்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் ரயிலடி தெரு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. கடை அமைந்துள்ள பகுதி வழியாக தனியார் மருத்துவ மனை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி தனியார் பள்ளி உள்ளிட்டவை உள்ளன. மது பிரியர்கள் குடித்துவிட்டு, அவ்வழியே செல்லும்பொது மக்களிடம் ரகளையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்து மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் டாஸ்மார்க் கடையை அகற்றக்கோரி ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெகவின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன், கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்பாட்டத்தில் பேசிய பார்த்திபன், ”பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் இல்லையென்றால் முற்றுகை போராட்டம் நடைபெறும், அப்போதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்தரோடு குடிக்கும் போராட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.