.ராசா முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருந்ததாக  சிபிஐ முன்னாள் இயக்குனர் ஏ.பி.சிங்,  பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

2ஜி அலைக்கற்றை வழக்கில், போதுமான ஆதாரங்கள் இல்லை என்று  முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட அனைவரும்  சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சிபிஐ இந்த வழக்கை எடுத்து விசாரிக்க காரணமாக இருந்தவரும்,  விசாரணையை ஆரம்பித்து  ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தவருமான சிபிஐ முன்னாள் இயக்குனர் ஏ.பி.சிங், பிபிசி செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “இந்தத் தீர்ப்பு எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை, 60 பக்கங்களை கொண்டதாகும். உரிமங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில்  அப்போதைய அமைச்சர் ஆ.ராசா முறைகேடு செய்ததற்கான போதுமான ஆதாரங்கள் எங்களிடம் இருந்தன.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், யூனிடெக் மற்றும் ஸ்வான் ஆகிய நிறுவனங்களுக்கு ஆதரவாக ஆ. ராசா செயல்பட்டார். மேலும், இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் ஒன்றாம் தேதி கடைசி நாளாக இருக்க, யூனிடெக் மற்றும் ஸ்வான் நிறுவனங்களுக்கு ஆதரவாக செப்டம்பர் 25 ஆம் தேதியே விண்ணப்பங்கள் பெறுவதை அவர் நிறுத்திவிட்டார்.

பிறகு  இடைத்தரகர் மூலமாக கனிமொழி மற்றும் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு சொந்தமான கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

அப்போது எங்கள் விசாரணையை உச்சநீதிமன்றம் பாராட்டியது” என்று தெரிவித்தார்.

விசாரணை மேலும் சிறப்பாக இருந்திருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்க அவர் மறுத்துவிட்டார்.

மேலும், இவ்வழக்கில் சி.பி.ஐ. மேல் முறையீடு செய்யவது குறித்தான கேள்விக்கு, அது தற்போது பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் எடுக்க வேண்டிய முடிவு என்று தெரிவித்தார்.