அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடன், தன்னுடன் இரண்டு செல்ல நாய்களை வளர்த்து வருகிறார். ஜெர்மன் வகை நாய்களான அவற்றின் பெயர் சேம்ப் மற்றும் மேஜர்.

இதில், சேம்ப் என்ற நாய், கடந்த 2008ம் ஆண்டு முதல் பைடனுடன் இருந்து வருகிறது. மேஜர் என்ற நாய் 2018ம் ஆண்டு முதல் அவருடன் வாசம் செய்கிறது.

இதனால், 4 வருட இடைவெளிக்குப் பிறகு, வெள்ளை மாளிகைளில் மீண்டும் செல்ல நாய்கள் குடியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில், டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தில், அவர்கள் எந்த நாயும் வளர்க்கவில்லை மற்றும் வெள்ளை மாளிகையில் எந்தவித கலை சார்ந்த நிகழ்வுகளும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் அதிபராக 8 ஆண்டுகள் பதவி வகித்த பராக் ஒபாமாவை எடுத்துக்கொண்டால், அவரும் நாய்களை வளர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2008ம் ஆண்டு அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டபோது, போர்ச்சுகீசிய வகை நாய்கள் இரண்டை வளர்த்தார். தேர்தல் பிரச்சாரத்தின்போது தனது மகள்களுக்கு உறுதியளித்ததன் அடிப்படையில், அந்த நாய்கள் அவர்களுக்கு வாங்கிக் கொடுத்தார்.

அதன்பிறகு, இடையில் 4 ஆண்டுகள் வெள்ளை மாளிகையில் நாய்களின் வாசம் இல்லாத நிலையில், தற்போது அடுத்தாண்டு ஜனவரி 20ம் தேதி முதல், வெள்ளை மாளிகையில் மீண்டும் நாய்கள் வசிக்கத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது துணை அதிபராக தேர்வுசெய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸும், நாய்களின் மீது பிரியம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.