சென்னை; சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணி காரணமாக,  சென்னையில் 5 மண்டலங்களில், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 36 மணி நேரம் குடிநீர் நிறுத்தம் செய்யப்பட்டுவதாக மெட்ரோ வாட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளுக்காக, மே 3 காலை 8 மணி முதல் மே 4 இரவு 8 மணி வரை, 36 மணி நேரம் குடிநீர் விநியோகம் தடைபடும் என சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம்  அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  சென்னையில் 5 மண்டலங்களில் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இததொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) குழாய் இணைப்பு வேலை செய்ய இருப்பதால், சென்னையின் பல பகுதிகளில் சனிக்கிழமை முதல் 36 மணி நேரம் குடிநீர் விநியோகம் தடைபடும்.

மே 3 (சனி) காலை 8 மணி முதல் மே 4 (ஞாயிறு) இரவு 8 மணி வரை அண்ணா நகர் மண்டலத்தில் (மண்டலம் 8) கெல்லிஸ் பால்ஃபோர்ட் சாலையில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் குழாய் இணைப்பு பணியை மேற்கொள்ள உள்ளது.

இதனால், கீழ்பாக்கம் நீர் விநியோக நிலையத்திலிருந்து வரும் நீர் விநியோகம் தடைபடும். இது நகரத்தின் 5 மண்டலங்களில் பல பகுதிகளை பாதிக்கும் என்று மெட்ரோ குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைக்குத் தேவையான குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குறிப்பாக மண்டலம் 4, 5, 6, 8 மற்றும் 9 ஆகிய  5 மண்டலங்களில் குடிநீர்  விநியோகம் பாதிக்கப்படும்.

மண்டலம் 4ல், தண்டையார்பேட்டை பகுதியில் குடிநீர் கிடைக்காது.

ராயபுரம் மண்டலத்தில், புரசைவாக்கம், பெரியமேடு, சௌகார்பேட்டை, எழும்பூர் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை போன்ற பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.

திருவிக நகர் மண்டலம் (மண்டலம் 6) மற்றும் அண்ணா நகர் (மண்டலம் 8), தேனாம்பேட்டை (மண்டலம் 9) ஆகிய மண்டலங்களில் ஓட்டேரி, அயனாவரம், பெரம்பூர், செம்பியம், கில்பாக்கம், வில்லிவாக்கம், கெல்லிஸ் மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் குடிநீர் கிடைக்காது.

இதுகுறித்து மெட்ரோ குடிநீர் வாரியம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:- “குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கும், குறைந்த அழுத்தத்தில் தண்ணீர் வரும் பகுதிகளுக்கும் டேங்கர்கள் மற்றும் தெரு குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்கப்படும். பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு நீர் விநியோகம் வழக்கம்போல் எந்தவித இடையூறும் இல்லாமல் முறையாக நடைபெறும்” என்று தெரிவித்துள்ளது. அவசர தேவை ஏற்பட்டால், மெட்ரோ வாட்டர் இணையதளத்தில் பதிவு செய்து டேங்கர்கள் மூலம் தண்ணீர் பெற்றுக்கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, தேவையான அளவு சேமித்து வைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தண்ணீர் விநியோகம் தடைபடாமல் இருக்க மெட்ரோ வாட்டர் நிறுவனம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.