ஸ்லாமாபாத்

பாகிஸ்தானும் இந்தியாவும் போர் புரிவது தற்கொலைக்கு நிகரானது என பாக் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்ற இம்ரான்கான் இரு நாடுகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சை மீண்டும் தொடர அழைப்பு விடுத்தார்.   அதை ஒட்டி அமெரிக்காவில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் இந்திய உள்துறை அமைச்சரும் பேச்சு வார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்நிலையில் பாகிஸ்தான்ஆதரவு தீவிரவாதிகளால் இரு காவலர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.  இதனால் இந்தியா கடும் அதிருப்தி அடைந்தது.   அதை ஒட்டி  இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் பேச்சு வார்த்தைகள் நடத்தவில்லை.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் துருக்கி நாட்டு ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.  அதில் இம்ரான் கான், “நானும் எனது கட்சியும் இந்தியாவுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த விரும்புகிறோம்.   அதனால் நான் அமைதியை நோக்கி இந்தியா ஓரடி முன் வந்தால் பாகிஸ்தான் இரு அடிகள் முன்னேறும் என தெரிவித்தேன்.

ஆனால் இந்தியா பிடிவாதமாக பயங்கர வாதிகளின் செயல்களைக் காட்டி பேச்சு வார்த்தையை தவிர்த்து வருகிறது.    பாகிஸ்தானின் அமைதி முயற்சிகளை இந்தியா ஊக்குவிக்காமல் உள்ளது.  அத்துடன் பேச்சு வார்த்தை அழைப்பையும் இந்தியா நிராகரித்துள்ளது.

இந்தியாவும் பாகிஸ்தானும் அணு சக்தி நாடுகள்.   இந்த இரு நாடுகளும் போர் புரிவது என்பது தற்கொலைக்கு நிகரானது ஆகும்.   பனிப்போர் இருப்பதும் கூட தவறானதாகும்.   பனிப்போரும் தீவிரமடைய வாய்பு உள்ளது.” என தெரிவித்துள்ளார்.