ஸ்ரீநகர்:
சமூக வலைதள செயலிகளில் ஒன்றான டிக்டாக் செயலியில், வன்முறையை தூண்டும் விதமாக வீடியோ பதிவிட்டு, அதை வைரலாக்கிய காஷ்மீர் இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சீன நிறுவனத்தின் பொழுதுபோக்கு செயலியான டிக்டாக் செயலி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று முன்னணியில் உள்ளது. இந்தியாவில் 5.4 கோடி பேர் டிக்டாக் செயலியை உபயோகப்படுத்தி வருகின்றனர்.
இந்த செயலியானது, பயனர்ககளின் நடிப்பு மற்றும் நடனத் திறன், பாடல் திறன் தொடர்பான விடியோக்களை பகிரும் வகையில் உருவாக்கப்பட்டது. நாளடைவில் இந்த செயலியில் வெளியான வீடியோக்கள் ஆபாசங்களையும், சர்ச்சைகளையும் உருவாக்கிய நிலையில், டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க கோரிக்களை எழுந்தன.
அதைத்தொடர்ந்து, அதை தடை செய்ய மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. டிக்டாக் செயலியை டவுன்லோடு செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். இதனையடுத்து டிக்டாக் செயலியை நீக்குமாறு மத்திய அரசு கூகுளுக்கு கடிதம் எழுதியதால் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.
பின்னர் இது தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் டிக்டாக் செயலிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க மதுரை நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தியது. அதைத்தொடர்ந்து மதுரை உயர்நீதி மன்றம், டிக்டாக் செயலி நிறுவனத்துக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் டிக்டாக் செயலியை அனுமதிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து தடை நீக்கப்பட்டதால் அதனை டவுன்லோடு செய்யும் வசதியை பிளே ஸ்டோர் மீண்டும் கொண்டுவந்துள்ளது. அதையடுத்து டிக்டாக் செயலி மீண்டும் நடைமுறைக்கு வந்தது.
இந்த நிலையில், காஷ்மீர் பந்திபோரா பகுதியில் நடைபெற்ற சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வன்முறையை தூண்டும் விதத்தில் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தயது.
இதையடுத்து, வதந்தி பரப்பிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளம் மூலம் மட்டுமே வதந்திங்கள், வன்முறை தொடர்பான கருத்துக்கள் வைரலாக்கப்பட்டு வந்த நிலையில், அதை கண்காணிக்க அந்நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது டிக்டாக் செயலி மூலம் வன்முறை தொடர்பான வதந்திங்களை பரவ உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.