சிவகங்கை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் வாக்குகளும் சிதறும் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம், இன்று மானாமதுரை அருகே கட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ப.சிதம்பரம் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.53.50 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சியில், கார்த்தி சிதம்பரம் எம்.பி. அடிக்கல் நாட்டினார். ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அரவிந்த், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் இளங்கோவன், முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், திருச்சி வந்த விஜய்க்கு பெரிய அளவில் கூட்டம் கூடியுள்ளது. இது தானாக வந்த கூட்டம். அதனால், அவருக்கு என ஒரு சக்தி இருப்பதை மறுக்க முடியாது என்றவர், இந்தக் கூட்டம் அமைப்பாக மாறி, தேர்தலில் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதை காலம்தான் சொல்லும்.
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் கட்சியும் களமிறங்கும் என அறிவிக்கப்பட்டு இருப்பது காரணமாக, அனைத்துக் கட்சிகளில் இருந்தும் வாக்குகள் சிதறும் வாய்ப்பு உள்ளது.
புதிக கட்சி தொடங்குவோர், ஆளுங்கட்சிக்கு எதிராகத்தான் தொடங்குவர். எதிர்க்கட்சிக்கு எதிராகத் தொடங்குவதில்லை என்று கூறிய கார்த்தி, திமுக அரசு பல திட்டங்களைச் செய்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை பெண்களிடம் சென்று சேர்ந்துள்ளது என்றாலும், சில காரணங்களால் சிலருக்கு விட்டுப்போய் இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர், சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைப் பொருத்து, அந்த சமயத்தில் அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெறுவது குறித்து முடிவு செய்யப்படும். ஏற்கெனவே அமைச்சரவையில் இடம்பெற கடந்த 2006-ல் வாய்ப்பு வந்தது. அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.