டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிசி சாக்கோ, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  கேரளாவில் ஏப்ரல் 6ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பி.சி.சாக்கோ கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

மூத்த தலைவரான பி.சி.சாக்கோ, நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவராகவும் இருந்துள்ளார், அதுபோல 2ஜி அலைக்கற்றை ஊழல் முறைகேடு குறித்த அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.

கட்சி தலைமைமீது கொண்ட அதிருப்திகாரணமாக, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை தலைவர் சோனியாகாந்திக்கு அனுப்பி விட்டதாக தெரிவித்துள்ளார்.

ராஜினாமா குறித்து செய்தியளார்களிடம் பேசிய பி.சி.சாக்கோ,  கேரளா ஒரு முக்கியமான தேர்தலை எதிர்கொள்கிறது. மாநிலத்தில், காங்கிரஸ் திரும்பி  ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள், ஆனால் காங்கிரஸ் கட்சியின்  உயர் மட்ட தலைவர்களால், மாநிலத்தில்  கோஷ்டி சண்டை  நடக்கிறது. இதை முடிவுக்கு கண்டு வர நான் மேலிடத்தில் வாதாடினார், ஆனால், அவர்கள், கோஷ்டிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறார்கள். இந்த பேரழிவை பார்த்துக்கொண்டு காங்கிரஸ் மேலிடம்  ஊமையாக உள்ளது  இதற்கு தீர்வு இல்லை.

பெரிய பாரம்பரியம் மிக்க கட்சியான காங்கிரஸ் கட்சியின், தொண்டனாக ஒரு. காங்கிரஸ்காரனாக  இருப்பது மதிப்புமிக்க விஷயம், ஆனால் இன்று கேரளாவில் யாரும் காங்கிரஸ்காரனாக  இருக்க முடியாது. எனவே நான் ஒரு முடிவுக்கு வந்து உள்ளேன். கடந்த பல நாட்களாக யோசனைக்கு பிறகுதான் இந்த முடிவை எடுத்து உள்ளேன்.

நான் காங்கிரசை விட்டு விலகுகிறேன். எனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி உள்ளேன்  என  தெரிவித்தார்.

கேரள சட்டமன்ற தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், பி.சி சாக்கோ காங்கிரஸில் இருந்து விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.