சென்னை: தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளை மாற்றினால் எதுவும் மாறாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மாற்றினால்தான் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கும், அண்ணாமலை என்கிற வேதாளம் அதிமுகவை விட்டுட்டு இப்போது  செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்  கடுமையாக விமர்சித்து உள்ளார்.

அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு பிறகு, இரு கட்சிகளிடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இரு தரப்பும் கடுமையாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர்.  மேலும், தற்போது பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே அரசியல் போர் ஏற்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு, பாஜகவை விமர்சனம் செய்த மாநில காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். செல்வ பெருந்தைகை ஒரு குண்டாஸ் குற்றவாளி என தெரிவித்ததுடன், அவர்மீதான வழக்குகளை பட்டியிலிட்டு, கடுமையாக சாடியிருந்தார்.

இநத் நிலையில், இன்று   சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு  அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக இணைப்பு குறித்து பேசுவருவது குறித்து கூறினார்.

அப்போது,  “அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டையான ஓபிஎஸ்ஸை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை. ஓபிஎஸ் கட்சித் தொண்டர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு துரோகத்தை செய்துள்ளார் என சாடியதுடன், அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் என்றவர், ஆனால்,  ஓபிஎஸ் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் கிடையாது என்று கூறினார்.

மேலும், . டிடிவி தினகரன் இல்லையென்றால் ஓபிஎஸ் கிடையாது என்றவர், ஓபிஎஸ்ஸிடம் கட்சிக்கு எந்த ஒரு விசுவாசமும் கிடையாது. அவருக்கு  பொறுப்பு கொடுத்த அதிமுக கட்சி அலுவலகத்தையே சென்று உடைத்திருக்கிறார் ஓபிஎஸ். நாங்கள் எல்லாம் அதனை கோவிலாக நினைக்கிறோம் அதை உடைத்தவரை எப்படி ஏற்க முடியும் என்றார்.

சசிகலா தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர், கட்சியிலேயே இல்லாத சசிகலா எவ்வாறு அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைப்பார்? அதிமுக தொண்டர்களை 90% இணைத்ததாக சசிகலா கூறுவது முழு சுவற்றில் பூசணிக்காயை மறைப்பது போன்றது. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி இணைந்ததுதான் 90 சதவீதம் இணைப்பு என்று எதுவும் இல்லை. அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டைகளை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை.” என்றார்.

தொடர்ந்து  பேசிய ஜெயக்குமார், “தமிழகத்தில் ஒரு மாதத்தில் நூற்றுக்கணக்கான கொலைகள் நடைபெற்று வருகின்றன. ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்படுகிறார். இதில் முழுமையான விவரம் வெளிவர வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை தேவை.

தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளை மாற்றினால் எதுவும் மாறாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மாற்றினால்தான் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கும். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறும் இடத்திலேயே, கள்ளச் சாராயம் குடித்து மருத்துவமனையில் சிலர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தமிழக அரசு இருக்கிறதா என ஒரு சந்தேகம் எழுகிறது. மக்களை பாதுகாக்கக் கூடிய கட்டமைப்பில் அரசு தோல்வி அடைந்துள்ளது.” எனத் தெரிவித்தார்.

பாஜக காங்கிரஸ் மோதல் தொடர்பான கேள்விக்கு பதில் கூறிய ஜெயக்குமார்,”அண்ணாமலை என்கின்ற வேதாளம் தற்போது எங்களை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது. லுங்கி அணிந்து கொண்டு நான் பேட்டி அளிக்கிறேன் என அண்ணாமலை கூறியிருக்கிறார். லுங்கி அணிந்து கொண்டு பேட்டி அளிப்பது ஒன்னும் அவ்வளவு அவமரியாதை செயல் அல்ல, இன்றும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் லுங்கி அணிகிறார்கள், இஸ்லாமியர்களும் லுங்கி அணிகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் இன்று லுங்கி அணிகிறார்கள். எனவே அது அவ மரியாதைக்குறிய செயல் அல்ல, நான் பெரும்பாலும் வேட்டி அணிந்து தான் தான் பேட்டி கொடுப்பேன்” என தெரிவித்தார்.