சென்னை: முத்தமிழ் முருகன் மாநாட்டின் தீர்மானத்துக்கு விசிக எம்.பி. ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இந்த தீர்மானம் “கல்வியைக் காவி மயமாக்கும்  என குறிப்பிட்டுள்ளார்.

பழனியில் தமிழ்நாடு அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்ட இரண்டு நாள் (ஆகஸ்டு (24-25) மாநாட்டில்,.   21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றுள்,

5 ஆவது தீர்மானமாக  “ முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.” எனவும்;

8 ஆவது தீர்மானமாக, “விழாக் காலங்களில் அருள்மிகு கந்தசஷ்டி முருகன் திருக்கோயில்களில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.” எனவும் ;

12 ஆவது தீர்மானமாக, “ முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.” எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதற்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  கல்வியை சமயச் சார்புடையதாக்குதல் என்னும் பாஜக அரசின் இந்துத்துவ செயல்திட்டத்தை இது முருகன் பெயரால் செயல்படுத்தும் முயற்சியன்றி வேறல்ல என விசிக எம்.பி. ரவிக்குமார் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இந்து சமய அறநிலையத் துறை தனது துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதை எவரும் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால், கல்வித் துறைக்குள் சமயத்தைக் கொண்டுவந்து திணிப்பது சமயச்சார்பின்மை என்னும் அரசமைப்புச் சட்ட நெறிக்கு எதிரானதாகும். இது கண்டனத்துக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.