-நெட்டிசன்
“விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், தனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து இந்துக்கள் மனதைப் புண்படும்படி எழுதி வருகிறார்.
இப்படி எழுத அவருக்கு தகுதி உண்டா?” என்ற கேள்வியோடு வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பதிவு ஒன்று உலாவருகிறது.

ரவிக்குமார் தனது முகநூல் பக்கத்தில், “காகிதப் பணத்தை ஒழிக்க விரும்பும் இந்துத்துவவாதிகள் ஏன் பிரிட்டிஷார் வருவதற்கு முன்பு இந்தியாவில் புழக்கத்திலிருந்த சோழியை நாணயமாக மீண்டும் அறிவிக்கக்கூடாது?
இந்துப் பழமையைக் காப்பாற்றியதாகவும் இருக்குமே!” என்று ஒரு பதிவை எழுதினார்.
மேலும், “கோயிலில் கார்டு ஸ்வைப் பண்ணி காணிக்கை செலுத்தச் சொல்வது மத நம்பிக்கையை அவமதிப்பதாகாதா?
மஞ்சள் துணியில் முடிந்துவைத்து உண்டியலில் காணிக்கை செலுத்தும் பக்தி இதை அனுமதிக்குமா?” என்றும் பதிவிட்டார்.

இதையடுத்து ரவிக்குமார் பற்றி விமர்சித்து ஒரு பதிவு சமூகவலைதளங்களில் உலவ ஆரம்பித்திருக்கிறது.
“தாலியை கழற்றும் நிகழ்வு ஒன்றை திராவிடர் விடுதலை கழகம் நடத்தியது. அதில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார் வி.சி.க தலைவர் திருமாவளவன்.
ஆனால் அவரு கட்சியின் பொதுச் செயலாளரான ரவிக்குமார், தனது மகனுக்கு இந்து முறைப்படி சடங்குகள் செய்து. தாலி கட்டி நடத்தி வைத்தார்.
அத் திருமணம் திருமாவளவன் தலைமையில் நடந்தது. திருமாதான் தாலியை எடுத்துக்கொடுத்தார்.

இந்த நிலையில் இந்து மத்தை விமர்சிக்கும் தகுதி வி.சி.க. பொதுச்செயலாளர் ரவிக்குமாருக்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது” என்று அந்த வாட்ஸ் அப் பதிவு கேட்கிறது.
ரவிக்குமார்தான் பதில் சொல்ல வேண்டும்.
Patrikai.com official YouTube Channel