சென்னை’

கஸ்ட் 3 ஆம் தேதி அன்று வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஒட்டம் சென்னை கடற்கரை மற்றும் காட்பாடி இடையே அரக்கோணம் வழியாக நடைபெற உள்ளது.

நமது நாட்டில் போக்குவரத்து வசதிகளில் முதலிடம் வகிப்பது ரயில் சேவை. ஆகும்.  நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயண நேரம் பாதுகாப்பு மற்றும் குறைந்த கட்டணம் உள்ளிட்ட காரணங்களுக்காக பலதரப்பு மக்களும் ரயில் பயணங்களையே பெரிதும் விரும்புகின்றனர்

நாளுக்கு நாள் ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்து வருவதால் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யவும் நிறைவான பயணத்தை வழங்கவும் ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் அதில் ஒன்றாக வெளிநாடுகளில் இயக்கப்படும் புல்லட் ரயில்களுக்கு இணையான வேகத்துடன் இந்தியாவில் முதற்கட்ட மெட்ரோ நகரங்களில் நாட்டின் அதிவேக ரயில் சேவையான வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்த வரிசையில் தற்போது வந்தே ஸ்லீப்பர் மற்றும் வந்தே மெட்ரோ என இரண்டு புதிய ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வந்தே பாரத் ரயில்களில் ஏழை எளிய மக்கள் அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்ய முடிவதில்லை என்பதால் அனைத்து தரப்பு மக்களும் பயணம் செய்யவும், அதே நேரத்தில் வந்தே பாரத் ரல்களில் இருக்கும் அனைத்து வசதிகளும் இடம்பெறும் வகையில் இந்த வந்தே மெட்ரோ ரயில்களை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே துறை முடிவு செய்தது.

இந்த நிலையில் இந்த வந்தே மெட்ரோ ரயில்கள் பஞ்சாப் மாநிலம் காபுர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலையிலும் சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தற்போது சென்னை ஐ சி எஃப் ஆலையில் கடந்த மே மாதம் 12 பெட்டிகள் கொண்ட வந்த மெட்ரோ ரயில் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் துவங்கி நடைபெற்று வந்தது.

வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி சனிக்கிழமை அன்று சென்னை கடற்கரை-காட்பாடி இடையே அரக்கோணம் வழியாக வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது..  ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்னையில் இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது ரயில் பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கண்காணிப்பு கேமராக்கள், தானியங்கி கதவுகள், அதிநவீன கழிப்பறை வசதிகள் இடம்பெறும், மேலும் இந்த ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் 100 பேர் அமர்ந்து செல்லும் வகையிலும் 200 பேர் நின்று செல்லும் வகையிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது தவிர இந்த வந்தே மெட்ரோ ரயிலில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.