உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட எலி துளை சுரங்கத் தொழிலாளியின் வீட்டை டெல்லி நிர்வாகம் இன்று இடித்து தரைமட்டமாக்கியது.

தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) நடத்திய இடிப்பு நடவடிக்கையில் கஜூரி காஸில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் இடித்துத் தள்ளப்பட்டன.

அதில், கடந்த ஆண்டு நவம்பரில் உத்தர்காஷியின் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை வெற்றிகரமாக மீட்ட குழுவில் இருந்த எலி துளை சுரங்கத் தொழிலாளிகளில் ஒருவரான வக்கீல் ஹாசனின் வீடும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

“உத்தரகாண்ட் மீட்பு நடவடிக்கைக்காக நான் விருதாகக் கேட்டது எனது வீடு மட்டுமே, ஆனால் டிடிஏ எந்த அறிவிப்பும் இல்லாமல் எனது வீட்டை இடித்துத் தள்ளிவிட்டது” என்று ஹாசன் கூறினார்.

தனது வீட்டைத் தொட மாட்டோம் என்று அரசாங்கம் உறுதியளித்ததாகவும், ஆனால் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் அதிகாரிகள் தனது வீட்டை இடித்து தரைமட்டமாக்கியதாக இந்திய டுடே செய்தி நிறுவனத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில் தெரிவித்துள்ளார்.