வாஷிங்டன்: இந்தியாவின் மீது நடத்தப்படும் இன்னொரு தீவிரவாத தாக்குதல், நிலைமைய உண்மையிலேயே மோசமாக்கிவிடுமென பாகிஸ்தானை எச்சரித்துள்ளது அமெரிக்கா.

எனவே, நீடித்த மற்றும் வலுவான நடவடிக்கைகளை பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத குழுக்களின் மீது மேற்கொள்ள வேண்டுமென, அமெரிக்கா சார்பில் பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா ஆகிய பயங்கரவாத அமைப்புகள் மீது உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அப்படி எடுக்கப்பட்டால் மட்டுமே, இப்பகுதியில் பதற்றநிலை உருவாகாமல் தடுக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

மற்றுமொரு தாக்குதல் இந்தியாவின் மீது நடத்தப்பட்டுவிட்டால், அது அப்பகுதியின் அமைதிச் சூழலை சீர்குலைத்துவிடும். அந்த நிலை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகளுக்குமே நல்லதல்ல என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி