கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர வேண்டும் என்றால் மீண்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழங்கங்கள் தெரிவித்துவருவதாக கூறப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனம் இதுவரை இந்த இரு தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்காத காரணத்தால், இந்த முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய மாணவி மிலோனி தோஷி என்பவருக்கு கல்லூரி நிர்வாகம் இவ்வாறு அறிவுறுத்தி உள்ளது, ஏற்கனவே இரண்டு டோஸ் கோவாக்சின் தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொண்ட அவர் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்.

இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிறுவன செய்திதொடர்பாளரை தொடர்பு கொண்ட நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு, உலக சுகாதார அமைப்பு அனுமதி பெறாத தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்து அனுமதி பெற்ற தடுப்பூசியை மீண்டும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

“இப்படி இரண்டு தடுப்பூசிகளை கலந்து போடுவதன் பாதுகாப்பு குறித்து எதுவும் உறுதியாக தெரியவில்லை என்ற நிலையில், ஏற்கனவே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மீண்டும் வேறொரு தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.

மாணவர்களின் படிப்பு ஒருபுறம் அவர்களது உடல்நிலை மற்றொரு புறம் என்று அனைத்தும் கேள்விக்குறியாகி உள்ளதால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் 2 லட்சம் மாணவர்களின் பெற்றோரும் செய்வதறியாது நிற்கின்றனர்.

அதேவேளையில், சுமார் 2.85 லட்சம் கோடி ரூபாயை கல்விக் கட்டணமாக ஈட்டி வரும் அமெரிக்க பல்கலைக்கழகங்களும் தங்கள் வருமானத்தை இழக்க தயாராக இல்லை என்றும் சொல்லப்படுகிறது.