நியூயார்க்:

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை கருப்புப் பட்டியலில் சேருங்கள் என்று ஐ.நா. சபைக்கு, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை தடை செய்வது குறித்து, பாகிஸ்தான் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்க மறுத்து வரும் நிலையில், அதை கருப்பு பட்டியிலில் சேர்க்க வேண்டும்  என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா உள்பட 3 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

கடந்த 14ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தற்கொலை பயங்கரவாதி காஷ்மீர் புல்வாமா மாநிலத்தில்  நடத்திய கார் வெடிகுண்டு  தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் உடல்சிதறி பலியானார்கள்.  இந்த தாக்குதலுக்கு தாங்கள் தான் என பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதையடுத்து, அந்த பயங்கரவாத அமைப்பை தடை செய்வது குறித்து பாகிஸ்தான் எந்தவித நடவடிக்கையும்  எடுக்காத நிலையில்,  சர்வதேச அளவில் இந்த பிரச்சினை இந்தியா கொண்டு சென்றது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வெளியுறவு அமைச்சகம் மூலம் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலின் தடை விதிக்கும் குழுவிடம் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் முறையிட்டுள்ளன. ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பின் தலைவனான மசூத் அசாருக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதை தடை செய்ய வேண்டும், அவனது சொத்துக் களை முடக்க வேண்டும், அசார் எந்த நாட்டிற்கும் செல்வதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை 3 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இந்த நடவடிக்கை பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைக்கு  கிடைத்த வெற்றி என்று கருதப்படுகிறது.