வாஷிங்டன்

ட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகு கவலைக்கிடமாக உள்ளதாக அமெரிக்க செய்தி  ஊடகங்கள்  தெரிவிக்கின்றன.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் வழக்கமாக அவரது தாத்தாவும் வட கொரிய நாட்டை கட்டமைத்தவருமான கிம் சங் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்வது வழக்கமாகும்.   இம்முறை அதாவது இந்த வருடம் ஏப்ரல் 15 அன்று அந்த கொண்டாட்டங்களில் அவர் கலந்துக் கொள்ளாதது மக்களுக்கு வியப்பை அளித்தது.   அதைத் தொடர்ந்து அவருடைய உடல்நிலை குறித்துப் பல உறுதியாகாத செய்திகள் உலவத் தொடங்கின.

அதிக அளவில் புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட கிம் உடல் நிலை குறித்து அடிக்கடி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.  அவருடைய இதயம் பாதிக்கப்பட்டதாகவும், மூளை செயல்பாட்டில் குறை உள்ளதாகவும் பல செய்திகள் வந்துள்ளன.  ஆனால் அவர் உடல்நிலை குறித்து அந்நாட்டு அரசு தரப்பில் எவ்வித செய்தியும் வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது.

ஆனால் அமெரிக்க ஊடகங்கள் கிம் ஜாங் உன் உடல்நிலை சரி இல்லாததால் ஒரு அறுவை சிகிச்சை நடந்துள்ளதாகவும் அதன் பிறகு அவர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றன.    ஆனால் வட கொரிய அரசு இது குறித்து எவ்வித கருத்தோ அல்லது விளக்கமோ அளிக்காமல் உள்ளது.

 ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு கிம் சுமார் 1 மாதம் வெளி வராமல் இருந்தார்.   அப்போதும் அவர் உடல்நிலை மோசமாக உள்ளதாக தகவல்கள் வந்தன.  அதன் பிறகு அவர் மக்களை சந்தித்த போதும் அவருக்கு ரகசிய சிகிச்சை அளித்து உடல்நிலை தேறியதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.