வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஜான் போல்டன் அப்பதவியில் இனிமேல் தொடரமாட்டார் என்று அறிவித்துள்ளார் டிரம்ப்.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; அமெரிக்க அதிபரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக ஜான் போல்டன்

நியமிக்கப்பட்டதிலிருந்தே அவருக்கும் அதிபருக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. முன்கோபமுள்ள ஜான் போல்டன், அதிபரின் பல கொள்கைகளில் முரண்பட்டார்.

தற்போது, ஜான் போல்டனின் விலகலை தனது டிவிட்டர் செய்தியின் மூலம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர், புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் அறிவிக்கப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

வடகொரியா, ஈரான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அமெரிக்க அதிபருக்கும் ஜான் போல்டனுக்கும் வேறுபாடுகள் இருந்து வந்தன. மேலும், அதிபரின் இதர ஆலோசகர்களுடனும் மாறுபட்டார் போல்டன். வெனிசுலா அரசியல் சூழலை கையாண்டது தொடர்பாக, தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மீது பெரியளவில் குற்றம் சாட்டியிருந்தார் அமெரிக்க அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.