வாஷிங்டன்

காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க நாடாளுமன்றக் குழு இன்று விசாரணை நடத்த உள்ளது

கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி அன்று மத்திய அரசு விதி எண் 370 ஐ ரத்து செய்து காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.   அதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.   சுமார் 80 நாட்களாக மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து வருகின்றன.

இது குறித்து பாகிஸ்தான், மலேசியா, துருக்கி போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.   காஷ்மீர் பகுதியில்  மத்திய அரசால் கடும் மனித உரிமை மீறல் நடந்து வருவதாக அந்த புகார்கள் தெரிவித்துள்ளன.   எனவே இதை அமெரிக்க நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளது.  இன்று இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு இந்த விசாரணை நடைபெற உள்ளது.

இன்று நடைபெற உள்ள இந்த விசாரணையை அமெரிக்க நாடாளுமன்றக் குழு தலைவர்  பிராட் ஷெர்மன் நடத்த உள்ளார்.   இந்த விசாரணைக்கு தெற்கு ஆசியாவின் மனித உரிமை : அரசு மற்றும் அப்பகுதியின் கருத்துக்கள்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.   இந்த விசாரணை அமெரிக்கா அரசின் தெற்கு மற்றும் மத்திய ஆசியச் செயலர், மனித உரிமை ஆணையர்  உள்ளிட்டோர் முன்பு நடைபெற உள்ளது.

இந்த விசாரணையில் கல்ந்துக் கொள்வோரிடம் குறுக்கு விசாரணை செய்து நாடாளுமன்றக்குழு காஷ்மீர் மாநில உண்மை நிலவரத்தைத் தெரிந்துக் கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.    இந்த கேள்வியின் போது பல கடினமான கேள்விகள் கேட்கப்பட உள்ளதால் மத்திய அரசு இந்த விசாரணையைக் கூர்ந்து கவனிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.