உறவுகள் – கவிதை பகுதி 3
குப்பைத்தொட்டி
பா. தேவிமயில் குமார்
உன்னுள்ளே
இருள் சூழ
இருந்தாலும்
இன்பமாகவே
இருந்தேன் !
வெளிச்சத்திற்கு
வந்தவுடன்
வேதனையை
அனுபவிக்கிறேனம்மா !
அம்மா,
உணர்வுகளற்று விட்டதா
உனக்கு ?
இல்லை
மகளென்றுத் தெரிந்ததால்
மனமற்று விட்டதா ?
இல்லை,
ஊர் பேசும்
என்பதற்காக
உன்னை காப்பாற்றிக்கொள்ள
என்னை இங்கு
கொட்டி விட்டாயா ?
வசதியையும்
வாழ்க்கையையும்,
தேடிக் கொண்டும்,
தேவைகளை
பெருக்கிக்கொண்டும்
போகும்,
இந்த சமூகத்திற்கு
இன்று மட்டுமல்ல
என்றுமே,
நம் குரல் கேட்காதம்மா !
பிறந்தவுடன்
பெட்டியில்
பயணம் செய்தவன்
பின்னாளில்
கர்ணன் ஆனான்,
பிறந்தவுடன், ஒருவன்
கோகுலத்திற்கு
கோமகனானான்,
ஆனால்…..
எனக்கு மட்டும்
“அனாதை” என்ற
பெயர் சூட்டப்படுமே
அம்மா !
பிள்ளைக்கு
ஏங்கும்
பெற்றவர்கள்
உலகில் உண்டு,
ஆனால்…..
பெற்றவர்க்கு
ஏங்கும்
பிள்ளைகளின்
பாசத்தை யாரறிவார் ?
மகனின்
ஏக்கத்தால்
தவித்த
தசரத மகாராஜனை
பாடிய சமூகமே,
பெற்றவளின்
பாசத்திற்கு
ஏங்கும்
பிள்ளையின் தவிப்பையும்
புரிந்து கொள்ளுங்கள் !
வாழ வழியில்லாமல்
எச்சில் இலை
போடும் இடத்தில்
போட்டாயோ ?
இல்லை,
இந்த பாரம்
இனியும் வேண்டாம்
என எண்ணி
தூர தூக்கியெறிந்தாயோ ?
தாயே !
அதனால் தான்,
தொப்புள் கொடி
தொடர்பு முடியும்போது
குப்பைத் தொட்டிக்கு
கொண்டு வந்தாயோ ?
தொட்டில்,
கட்டி தூங்க வைக்கவில்லை,
கட்டில் மேல்
கிடத்தவில்லை,
தாலாட்டு பாடவில்லை
தலைகோதி விடவில்லை
ஆனால்,
அதற்குள்,
அனாதைப் பட்டியலில்
இணைத்து விட்டாயே தாயே !
பிறந்தவுடன்
இனிப்பைப்
பரிமாறும்
சமுதாயத்தில்
நாமிருவரும்
நமக்குள்ளே
இழப்பைப்
பரிமாறிக் கொள்கிறோம்
உனக்குள் என்னை
உணரவில்லையா ?
பால் சுரக்கவில்லையா ?
பாசம் பிறக்கவில்லையா ?
பெற்ற தாயே !
உனக்கு என்னை
தெரியவில்லை,
ஆனால்
இங்கு உணவு
தேட வரும்
உயிரினங்கள்
என்னை,
“ஊன்”
என நினைத்து
உண்ணப் போகின்றன !
எறும்புகளும்,
ஈக்களும்
என்னை
ஏந்தும் முன்பாக
நீ வந்து
என்னை
ஏந்திக்கொள்ளம்மா,
நெஞ்சில்
சாய்த்துக் கொள்ளம்மா,
வருவாயா அம்மா ?
இல்லை,
வேறு நல் உள்ளம்
என்னை நாடி
வருவார்களா ?
அல்லது
யாருமில்லாத,
அனாதையான,
ஆதரவில்லாத
என்ற
அடைமொழிகளுடன்
என்
எதிர்காலம் செல்லுமா ?
என்ன பதிலம்மா ?
என்னைத் தேடி
வந்து விடம்மா,
விழிகள் திறக்காமல்
இருந்தாலும்,
உன்னை மட்டுமே
உறவெனத் தேடுகிறேன்
வந்து விடம்மா
இப்படிக்கு
இன்று பிறந்த
பச்சிளம் குழந்தை