லக்னோ
உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது போடப்பட்ட வழக்கை அவரே ரத்து செய்துள்ளார்.
கடந்த 1995 ஆம் வருடம் அப்போதைய உ பி அரசு. தடைய மீறி பொதுக்கூட்டம் நடத்தியதற்காக யோகி ஆதித்யநாத் மற்றும் 14 பேர்கள் மீது வழக்கு ஒன்றை பதிந்திருந்தது. வெகு நாட்களாக அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் யோகியுடன் தற்போதைய நிதி அமைச்சர் சிவ் பிரசாத் சுக்லா மற்றும் பாஜக வின் சட்ட மன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஷீதல் பாண்டே ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்
இந்த வழக்குக்காக நீதிமன்றத்தில் ஜாமினில் வெளி வர முடியாத கைது வாரண்டுகளை பிறப்பிக்குமாறு பிபிகஞ்ச் காவல் நிலையம் முன்பு கேட்டுக் கொண்டிருந்தது. இந்த காவல் நிலையத்தில் தான் வழக்கு பதியப்பட்டிருந்தது. தற்போது அரசு சார்பில் இந்த வழக்கை திரும்பப் பெற உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த தகவலை நீதிமன்றமும் ஆமோதித்துள்ளது. இது குறித்து அரசின் வழக்கறிஞர் மிஸ்ரா, “இந்த வழக்கு பதியப்பட்டதும் அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் வழக்கில் ஆஜராகததால் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீனில் வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்தது. தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையில் அமைந்துள்ள அரசு அந்த வழக்கை திரும்ப பெறக் கோரி மனு ஒன்றை அளித்துள்ளது. குளிர்கால விடுமுறைக்குப் பின் இந்த மனுவை நீதிமன்றம் பரிசீலிக்கும்” என கூறி உள்ளார்.
இது குறித்து குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான உ பி நிதி அமைச்சர் சுக்லா, “எனக்கு இந்த கூட்டம் பற்றி எதுவும் நினைவில்லை. இது சுமார் 22 வருடம் முன்பு நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது என் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப் பட்டது குறித்து எனக்கு எதுவும் தெரியாது” எனக் கூறி உள்ளார். சட்ட மன்ற உறுப்பினரான ஷீதல் பாண்டேவின் மகன் திகம்பர் தனது தந்தையின் பெயர் காவல் நிலையப் புகாரில் இடம் பெற்றுள்ளதாகவும் ஆனால் அவர் குற்றம் செய்தாரா என்பது தெரியவில்லை எனவும் கூறி உள்ளார். இது போல சுமார் 20000 வழக்குகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்டது எனவும் அவைகளும் ரத்து செய்யப்படும் எனவும் உ பி அரசு அறிவித்துள்ளது.