லக்னோ:

த்தரப்பிரதேச மாநிலத்தில் பெண் காவலர் ஒருவர் உள்ளூர் தாதாவின் காதல் வலையில் சிக்கி அவரை  திருமணம் செய்துள்ளார். இது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாதா – பெண் போலீஸ் திருமணம்

கிரேட்டர் நொய்டா பகுதியைச் சேர்ந்த பெண் காவலர்  பாயல் என்பவர் அங்குள்ள  சுராஜ்பூர் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, மன்மோகன் கோயல் என்ற கடைக்காரரை  கொலை செய்த குற்றத்திற்காக அந்த பகுதியைச் சேர்ந்த தாதா ராகுல் தரசனா என்பவர் விசாரணைக்கு வந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்றது. தாதா ராகுல் தரசனாமீது ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக அவர் அடிக்கடி நீதிமன்றம் வருவது உண்டு.

அப்போது ரவுடிக்கும் பெண் போலீசுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ள நிலையில்,  இந்த காதல்  ராகுல் தர்சானா சிறையில் இருந்தபோதும்;  பின்னர் சிறையை விட்டு வெளியே வந்த நிலையிலும் தொடர்ந்துள்ளது. இதை  இருவரும்  வெளியில் யாருக்கும் தெரியாமல் வைத்திருந்துள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளாக அவர்களுக்கிடையில் காதல் தொடர்ந்து வந்த நிலையில் சமீபத்தில் ராகுலும், பாயலும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்தப் புகைப்படத்தை ராகுல் சமூக வலைதளங்களில் பதிவிட அதைப் பார்த்து அந்தப் பகுதி காவல் துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து கருத்துதெரிவித்துள்ள காவல்துறை அதிகாரி ஒருவர்  ‘இந்தத் திருமணம் வெளிப்படையாக மாநில காவல்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திருமணம் நடந்தது உண்மையா? ராகுல் செய்த குற்றங்களில் பாயலுக்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா? எனவும் விசாரணை நடத்த இருப்பதாக தெரிவித்து உள்ளார்.