லக்னோ:

உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஒரு அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பொதுவுடமை  புரட்சியாளர் லெனின் சிலையை பாஜக தொண்டர்கள் உடைத்தனர். இதன் தொடர்ச்சியாக  தமிழகத்திலும் சில இடங்களில் பெரியார், அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.

இச்சம்பவங்கள், நாடு முழுவதும் பெரும் விவாதப்பொருளாக   ஆனதையடுத்து, பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும், சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

இதனால்,   பிரச்சினை சற்று ஓய்ந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஒரு அம்பேதக்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது.  அங்கு அசம்கர் நகரில் அம்பேத்கர் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அம்பேத்கரின் முழு உருவச்சிலையில் தலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளதால், அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து  காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.