லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து, 3 அடுக்கு பொதுமுடக்கத்தை அமல்படுத்தி உள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிப்பு அடைந்துள்ளோர் பட்டியலில் இங்கிலாந்து 12-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை 43,018  பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இங்கிலாந்தில் 3 அடுக்கு பொது முடக்கத்தை அமல்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

தொற்று விகிதங்களைப் பொறுத்து நடுத்தரம், அதிகம் மற்றும் மிக அதிகம் என 3 அடுக்குகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.
முதல் அடுக்கின் படி, நடுத்தர பாதிப்பு உள்ள  பகுதிகளில் பார்கள், விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு இரவு 10 மணி ஊரடங்கு உத்தரவு. இறுதிச் சடங்கு, திருமணம் போன்றவை தவிர 6 பேருக்கு மேற்பட்டோர் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் அனைத்து இடங்களும் இதில் அடக்கம்.
2வது அடுக்கின்படி, பாதிப்பு மிக, மிக அதிகமாக உள்ள லிவர்பூல் நகர மண்டலத்தில் மக்கள் ஒன்றுகூடும் எவ்வித நிகழ்வும் அனுமதிக்கப்படாது. மதுபான விடுதி, கேளிக்கை விடுதிகள் முற்றிலுமாக மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
3வது அடுக்கின்படி  பாதிப்பு அதிகம் உள்ள மான்செஸ்டர், போல்டன், நாட்டிங்ஹாம், லங்காஷயர், மேற்கு யார்க்சயர், லீட்ஸ், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ், பர்மிங்காம், நாட்டிங்ஹாம்சயர் ஆகிய ஊர்களில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒன்றுகூடும் எவ்வித நிகழ்வும் அனுமதிக்கப்படாது. மதுபான விடுதி, கேளிக்கை விடுதிகள் முற்றிலுமாக மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.

ஜிம்கள், கேசினோக்கள், சிகையலங்கார நிபுணர்கள் மற்றும் அழகு நிலையங்கள் மூடப்பட வேண்டுமா என்று உள்ளூர் அரசியல்வாதிகள் முடிவு செய்யலாம்.
இந்தப் பகுதிகளில் அத்தியாவசியமற்ற பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என அரசு வலியுறுத்தி உள்ளது. லிவர்பூல் நகர மண்டலம் முழுவதும் இதில் அடங்கும். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்கு நிதியுதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.