சென்னை

மிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்முலா 4 கார் பந்தயம் விமர்சனங்களை மீறி வெற்றிகரமாக நடந்ததாக தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் பார்முலா-4 கார் பந்தயம் நடைபெற உறுதுணையாக இருந்த அரசுத்துறை பணியாளர்களுக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

உதயநிதி ஸ்டாலின் தனது உரையில்

“சென்னையில் பார்முலா-4 கார் பந்தயத்தை நடத்துவதில் இருக்கும் பெரிய சவால் போக்குவரத்து மேலாண்மைதான். மக்கள் நடமாட்டமும், வாகன நெரிசலும் மிகுந்த பகுதியில் இந்த கார் பந்தயம் நடத்தப்பட்டுள்ளது. கார் பந்தயத்தின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும், அதனை படம்பிடித்து பெரிய செய்தியாக்கி விடலாம் என்றும் நிறைய பேர் காத்துக் கொண்டிருந்தனர். போட்டியை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று கூட சிலர் திட்டமிட்டனர்.

ஆனால் கார் பந்தயம் ஒருபுறம் நடந்தபோது, மறுபுறம் போக்குவரத்து சீராக இயங்கிக் கொண்டிருந்தது. அதை பார்த்த பிறகு, விமர்சனம் செய்தவர்கள் கூட பாராட்ட ஆரம்பித்துவிட்டனர். சிறிய விபத்து நடந்தால் கூட அதை பெரிதுபடுத்த வேண்டும் என்று சிலர் காத்திருந்தனர். பந்தய தடத்திற்குள் நாய்க்குட்டிகள் ஓடி வந்ததைப் பார்த்து இது நாய் பந்தயமா? கார் பந்தயமா? என்று சிலர் விமர்சித்தனர்.

சென்னையில் நடந்தது பார்முலா-4 கார் பந்தயம். பார்முலா-1 கார் பந்தயத்தில் கூட சில நேரங்களில் நாய், முயல், மான் போன்ற விலங்குகள் உள்ளே வந்துவிடும். இதுபற்றி கூட தெரியாதவர்கள்தான் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். விமர்சனங்களை மீறி பார்முலா-4 கார் பந்தயம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.”

என்று தெரிவித்துள்ளார்.