மும்பை
உத்தவ் சிவசேனா இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை விமர்சித்துள்ளது.
தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டு எல்லையில் அமைதி நிலவி வருகிறது. இதை பல்வேறு கட்சிகள் பாராட்டி உள்ளன/ஆனால் சண்டை நிறுத்தம் தொடர்பாக மராட்டிய முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனா கட்சி விமர்சித்து உள்ளது.
அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ கட்டுரையில்,
“சுதந்திர போராட்ட வீரர் வீரசாவர்க்கர் அகன்ற பாரதம் தொடர்பாக கனவு கண்டார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முதல் ராமேஸ்வரம் வரை, சிந்து முதல் அசாம் வரை இந்தியா இருக்க வேண்டும் என விரும்பினார். ஆனால் பாகிஸ்தானுடன் சண்டை நிறுத்தம் செய்து அந்த கனவு நிறைவேறவிடாமல் மோடி அரசு கிடைத்த வாய்ப்பை வீணாக்கி விட்டது. சாவர்க்கர் பெயரை கூறி இனிமேல் அரசியல் செய்ய மோடிக்கு உரிமையில்லை.
பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அகன்ற பாரதத்துக்கு ஆதரவாக பேசினர். ஆனால் வாய்ப்பு கிடைத்தபோது நழுவ விட்டு விட்டனர். பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் சண்டை இன்னும் 4 நாட்களாவது நீடித்து இருக்க வேண்டும். அப்படி நடந்து இருந்தால் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கராச்சி, லாகூரை கைப்பற்றி இருக்கும்.
ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதை கெடுத்துவிட்டார். சண்டையை நிறுத்தும் முன் இந்தியா குறைந்தபட்சம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையாவது கைப்பற்றி, பலுசிஸ்தானை பாகிஸ்தானில் இருந்து பிரித்து இருக்க வேண்டும்”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.