சென்னை: ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 3 தொகுதி திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதையொட்டி, தமிழக அரசியல் கட்சிகள், பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அரசு திட்ட பணிகளை தொடங்கி வைக்க மாவட்டங்களுக்கு செல்லும்போது திமுகவினரிடமும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இதுமட்டுமின்றி உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் தொகுதிவாரியாக முக்கிய திமுக நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து வந்து, அவர்களிடம் தனித்தனியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த நிகழ்வின் போது ஒவ்வொரு தொகுதிகளிலும் உள்ள களநிலவரம் குறித்து அந்த தொகுதி நிர்வாகிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறியக்கூடிய நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில் புதுக்கோட்டை, வேதாரண்யம் மற்றும் பல்லாவரம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் போது தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, தேர்தல் பணி உள்ளிட்டவை குறித்து அவர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில், இதுவரை 37 நாட்களில் 79 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.