செகோர், மத்தியப் பிரதேசம்

பிரதமர் ஆள்திறன் மேம்பாட்டு திட்டத்தில் பணி புரியும் பெண் ஊழியர் ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்ததாக பாஜக தொண்டர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.   கடந்த ஜனவரி மாதம் எட்டு வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது நாடெங்கும் பரபரப்பை உண்டாக்கியது.   இந்தூரில் ஒரு கைக்குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது.    இதை ஒட்டி 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க இயற்றப்பட்ட அவசரச் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

மத்தியப்பிரதேசம் செகோர் மாவட்டத்தில் பிரதமர் ஆள்திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணி புரியும் பெண் ஊழியர் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.   இதை ஒட்டி இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரான முகேஷ் தாக்குர் அந்த தொகுதி பாஜக பாராளுமன்ற உறுப்பினரின் பிரதிநிதி ஆவார்.   மற்றவரான ராஜா கலெக்டர் பாஜக பழங்குடி பிரிவின் செயற்குழு உறுப்பினர் ஆவரர்.