வாஷிங்டன்:

35 நாட்களுக்கு மேலாக நடந்த நிர்வாக முடக்கத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.


ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை வழங்கி அரசு நிர்வாகம் மீண்டும் செயல்பட அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதேசமயம், பிப்ரவரி 15-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்து இந்த ஒப்புதலை அதிபர் அளித்துள்ளார்.
அதற்குள் எல்லைச் சுவர் எழுப்ப நிதி ஒதுக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள மசோதா நிறைவேறாவிட்டால், மீண்டும் நிர்வாக முடக்கம் அல்லது அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுபவர்களை தடுக்க, மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு சுவர் அமைப்பதற்கு 570 கோடி டாலர் நிதி ஒதுக்கும்படி அதிபர் டிரம்ப் நாடாளுமன்றத்தில் முறையிட்டார்.

ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டிரம்ப் கேட்ட தொகையை அளிக்க மறுத்துவிட்டன. இதனால் மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கும் மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்தது.

இதனையடுத்து அரசின் செலவின மசோதாக்களை நிறைவேற்ற டிரம்ப் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் அமெரிக்காவில் கடந்த மாதம் 22-ம் தேதி முதல் அரசு நிர்வாகம் உள்ளிட்ட முக்கிய அரசு துறைகள் முடங்கின.

8 லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளமின்றி தவித்தனர். அரசு சேவைகளைப் பெற முடியாமல் குடிமக்களும் அவதிப்பட்டனர். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டிரம்ப், அரசு முடக்கத்தைத் திரும்பப் பெறுகிறேன். அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் விரைவில் வந்துசேரும் என்றார்.