வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்ற தனது குற்றச்சாட்டை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார் தற்போதைய அதிபர் டிரம்ப்.

கொரோனா தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது பேசிய அவர், தனது தோல்வியை கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டதுபோல் கருத்து கூறினார் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

அதிபர் தேர்தல் தொடர்பாக அறிவிக்கப்பட்ட முடிவை, சட்டப்பூர்வ வழக்குகளின் மூலமாக மாற்றியமைக்கப் போவதாக அவர் கூறிவருகிறார். ‍அவர், இரண்டாம் முறையாக அதிபராக தொடருவதற்கு தயாராகி வருகிறார் என்று அவரின் உதவியாளர்களும் கூறுகிறார்கள்.

நவம்பர் 15ம் தேதி ஞாயிறன்று காலையில், “தேர்தல் முறைகேட்டினால் ஜோ பைடன் வென்றார்” என்று டிவிட்டரில் பதிவுசெய்துள்ளார் டிரம்ப்.

“போலி ஊடக செய்திகளின் பார்வையில் மட்டுமே ஜோ பைடன் வென்றுள்ளார். நான் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை! நாம் இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியுள்ளது” என்றும் பதிவிட்டுள்ளார் டிரம்ப்.