திரிபுரா மாநிலம் சுர்மா சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வாக இருப்பவர் அஷிஸ் தாஸ், இவர் பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்தவர்.

சமீப நாட்களாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானெர்ஜீ-யை வெகுவாக புகழ்ந்து வருவதுடன், இந்தியாவில் மிகவும் பிரபலமான அரசியல்வாதியாக மம்தா திகழ்வதாக கூறிவருகிறார்.

மேலும், அரசு நிறுவனங்களையும் அரசு சொத்துக்களையும் தனியாருக்கு விற்று வரும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியையும், தனது சொந்த கட்சியான பா.ஜ.க. தலைமையையும் விமர்சித்து வந்தார்.

இந்நிலையில், இன்று அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக அறிவித்ததுடன், தான் பா.ஜ.க. வில் இருந்ததற்காக தன்னை தூய்மைப்படுத்திக்கொள்ள வேள்வி நடத்தியதுடன் கங்கையிலும் நீராடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

https://twitter.com/Tamal0401/status/1445337061897252866

வட கிழக்கு மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நோக்கத்துடன் மம்தா பானெர்ஜீ செயல்பட்டு வரும் நிலையில், புதிதாக இணையும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. யாகம் வளர்த்து மொட்டையடித்து கங்கையில் நீராடியது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.