சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சாலையோர கிணற்றில் கார் மூழ்கிய சம்பவத்தில், கோவையைச் சேர்ந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்செந்தூர்  அருகே உள்ள பரமன்குறிச்சி  வெள்ளாளன் விளையில் உள்ள கிறிஸ்தவ ஆலய  பிரதிஷ்டை விழாவில் கலந்துகெலாள்வதற்காக  கோயம்புத்தூரில் இருந்து குடும்பத்துடன் காரில் வந்த இவர்கள், சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த கிணற்றுக்குள்  கார் பாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று  காலை  (மே 17) அன்று கோவையைச்சேர்ந்த சைனி கிருபாகரன்  குடும்பத்தினர் உள்பட 8 பேர்  ஆம்னி காரில்  புறப்பட்டு ஊருக்கு வந்தனர். இந்த காரை மோசஸ் (50) என்பவர் ஓட்டினார். இந்த கார் மாலை 4 மணியளவில் சாத்தான்குளம் அருகே சிந்தாமணிக்கும் மீரான்குளத்துக்கும் இடையே கார்  வந்துகொண்டிருந்தபோது,   அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் வலதுபுறம் இருந்த தடுப்புச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் பாய்ந்தது. இதனால் காரில் உள்ளவர்கள் அலறினார்கள். ஆனால், அந்த பகுதி காட்டுப்பகுதி என்பதால், யாருக்கும் விபத்து நடந்தது தெரிய வில்லை.

இதற்கிடையில், கிணற்றுக்குள் விழுந்த காரில் இருந்து சைனி கிருபாகரன், ஜெரின் எஸ்தர் ஆகிய 2 பேர் காரின் கதவை திறந்து வெளியேறி, பொதுமக்களை உதவிக்கு அழைத்தனர். இதையடுத்து கிராம மக்கள் உடனடியாக சாத்தான்குளம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஹெர்சோமை கிராம மக்கள் மீட்டனர்.

தகவல் அறிந்து சாத்தான்குளம், நாங்குநேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி தண்ணீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில், 5 பேர் உயிரிழந்தனர்.

கார் விபத்துக்குள்ளான  கிணறு சுமார் 50 அடி ஆழம் கொண்டது என்பதால், சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக தேடியும் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ஜேசிபி இயந்திரங்கள் வரவழைத்து தேடும் பணி நடைபெற்றது. கிணற்றுக்குள் விழுந்த குழந்தை உள்பட 5 பேர் இறந்த நிலையில் மீீட்கப்பட்டனர்.

இது அப்பகுதி மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் கோவையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.