புதுடெல்லி:
டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து வரும் 18 ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து ஐஎம்ஏ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பணியில் டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். அதே நேரத்தில் இவர்கள் மீது தேவையற்ற தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

அசாம் பீகார் ,மே.வங்கம், டில்லி,உ.பி., கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களில் டாக்டர்களுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து உள்ளது. இதனை தடுக்கும் வகையில் மருத்துவமனைகளை பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட வேண்டும்.

டாக்டர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் வகையில் நாடு முழுவதும் மாஸ்க்குகள் அணிந்து ரிப்பன் அணிந்து சட்டைகளில் கருப்பு பேட்ஜ்கள் அணிந்து வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.