கோயம்புத்தூர்
நாளை பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது/

கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹிரன்பால், பாபு. அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு விசாரணையின்போது. பாதிக்கப்பட்ட 8 பெண்கள் வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த 2021-ம் ஆண்டு சிபிஐ விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அண்மையில் அரசு தரப்பு சாட்சியங்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டு இந்த 9 பேரிடமும் தனித்தனியாக சுமார் 50 கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விகளும் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் அளித்த பதில்களும் வீடியோ சாட்சியங்களுடன் பதிவு செய்யப்பட்டன.
விசாரணை நிறைவடைந்ததால் மே 13 ஆ,ம் தேதி (நாளை) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.
தமிழகம் முழுவதும் இடமாற்றம் செய்யப்பட்ட 77 நீதிபதிகளில் பொள்ளாச்சி வழக்கை விசாரித்து வரும் நீதிபதி நந்தினிதேவியும் ஒருவர். கரூர் மாவட்ட குடும்ப நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டாலும் பொள்ளாச்சி வழக்கு காரணமாக மறு உத்தரவு வரும் வரை நீதிபதி நந்தினிதேவி அங்கேயே பணி புரிவார் என்று சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்ததால் நீதிபதி தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.