சென்னை

நாளை தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு  நாளையே  புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

தமிழகத்தில்ல் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்தாண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.

ஏப்ரல் 2 முதல் 5-ம் தேதி வரையும், 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 23-ம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்றன. ஏப்ரல் 24-ம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது.

ஆண்டு தோறும் பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக இருந்ததால், ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிதிருந்தது.

கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  எனவே தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி வளாகப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் பள்ளிகள் தரப்பில் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

மேலும் அரசு,  அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுப்புத்தகங்கள் நாளையே வழங்கப்படவுள்ளன.  புதிய இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கெனவே உள்ள பழைய அட்டையைப் பயன்படுத்தி பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.