சென்னை

நாளை பொறிய்யியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். இங்கு வழங்கப்படும் பி.இ., பி.டெக். படிப்புகளில், சுமார் 2 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் இணையவழி பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு மே 6 ஆம் தேதி முடிவடைந்தது. ஆசிரியர்கள், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று கடைசி தேதி ஜூன் 11 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பொறியியல் படிப்புகளில் சேர 2,53,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணையவழியில் விண்ணப்பித்தனர்.

அவர்களுக்கு ஜூன் 12- ம் தேதி சமவாய்ப்பு எண் இணைய வழியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஜூன் 13 முதல் 30-ஆம் தேதி வரை மாணவர்களின் சான்றிதழ்கள் இணையவழியில் சரிபார்க்கப்பட்டன. தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் நாளை (ஜூலை 10) வெளியிடப்படவுள்ளது.

நாளை சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக்கல்வி ஆணையரகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி தரவரிசை பட்டியலை வெளியிடவுள்ளார். மாணவர்கள் தரவரிசை பட்டியலை பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். தொடர்ந்து, விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வுசெய்வதற்கான இணையவழி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.