சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாளை (ஞாயிறு) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,  ஊரடங்கு விதிகளை மீறினால் வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து உள்ளது. இதனால் தினசரி பாதிப்பு பரவல் அதிதீவிரமாக பரவி வருவதைத் தொடர்ந்து, கடந்த 20-ந் தேதி (செவ்வாய்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு  உள்ளது. இரவு ஊடங்கின்போது, இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை தடை அமலில் இருக்கும். அதுபோல, ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  அத்தியாவசிய தேவையின்றி அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி  நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், டாஸ்மாக் மதுக்கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்பட எதுவும் செயல்பட அனுமதி கிடையாது.  எனினும், அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்கள், எரிபொருள் எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும்  250-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனைச்சாவடிகளில் ஒரு போலீஸ் அதிகாரி, வருவாய் துறை அதிகாரி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி ஆகியோர் வாகன தணிக்கை பணிகளில் ஈடுபடுவார்கள். விதிகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். மேலும், அவர்கள் பயணித்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.