சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாளை மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் சென்னையில் நடைபெறுகிறது. நாளை முகாமில்,  2வது டோஸ்கள் மட்டுமே போடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து கடந்த  12ந்தேதி மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்களும், சென்னையில் மட்டும் 1600 முகாம்களும் நடைபெற்றன. இந்த ஒரு நாள் முகாமில் மட்டும் 28 லட்சத்து 91 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளார்கள்.

இதையடுத்து நாளை (19ந்தேதிர) மீண்டும் ஒரு மெகா தடுப்பூசி முகாமை நடத்த தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி, நாளை சென்னையில் மீண்டும் 1600 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது.  இதில் கோவாக்சின், கோவிஷீல்டு 2வது டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.